பண மோசடி வழக்கில், நடிகை புவனேஸ்வரி மற்றும் அவரது தாயை போலீசார் கைது செய்தனர். சென்னை, கீழ்பாக்கம் ஆம்ஸ் சாலையை சேர்ந்தவர் பிரகாஷ். சினிமா பைனான்சியர். அம்பத்தூர் தொழிற்பேட்டை இரண்டாவது பிரதான சாலையில், இவருடைய அலுவலகம் உள்ளது. கடந்த 2010 ஏப்ரல் மாதம், இவரை தரகர் மூலம் நடிகை புவனேஸ்வரி அனுகியுள்ளார். தனது தாய் சம்பூர்ணம் நடத்தி வரும் அஷ்டலட்சுமி பிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மூலமாக, "கொஞ்சம் கோபம் கொஞ்சம் சிரிப்பு என்ற படத்தை தயாரிக்க உள்ளதால், 90 லட்ச ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். பணம் முதலீடு செய்தால், லாபத்தில் பங்கு தருவதாகவும், பணத்தை திரும்ப தரவில்லை என்றால், சென்னையில் இருக்கும் வீடு, கோவையில் தங்களுக்கு சொந்தமாக இருக்கும் திரையங்கம் ஆகியவற்றை தருவதாகவும் கூறி, பிரகாசிடம் இரண்டு தவணைகளாக 90 லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். இவர்கள் தயாரித்த படம், சமீபத்தில் வெளிவந்தது.
இந்த நிலையில், பிரகாஷ் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். பணத்தை தர மறுத்ததுடன், நடிகை புவனேஸ்வரியும், அவரது தாய் சம்பூர்ணமும், பிரகாசுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார், நடிகை புவனேஸ்வரி, அவரது தாய் சம்பூர்ணம் ஆகியோரை, சாலிகிராமத்தில் உள்ள அவர்களது வீட்டில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.